Covid 19 : நுரையீரலை பலப்படுத்தும் இயற்கை மூலிகைகள்

கொரோனா வந்தாலே மரணம்தான் போலும் என்று பீதியை கிளப்பும் கொரோனா கோவிட்-19 தொற்று தீவிரமாகும் போது அவை மூச்சுத்திணறலை உண்டாக்கி பிறகு உயிரிழப்பை உண்டாக்கிவிடும். தொற்று அதிகமாக நுரையீரலில் பரவும் போதுதான் இவை நிகழும் என்றாலும், நுரையீரலை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் தொற்றை எதிர்த்துப் போராடமுடியும். நுரையீரலை பலப்படுத்த அதிலும் உடனடியாக பலப்படுத்த, செய்ய வேண்டிய விஷயங்களில் உணவு வகைகளும் அடங்கும். அதற்கு முன்பு நுரையீரல் குறித்து தெரிந்துகொள்வோம். மனிதன் சுவாசிக்க அத்தியாவசியமானது மூச்சு. உயிர்மூச்சு என்கிறோம். மூச்சு சீராக இருக்க காரணம் நுரையீரல் தான்.

இந்த நுரையீரைலைப் பாதிப்பில்லாமல் வைத்திருக்கும் வரை மூச்சு சீராக இருக்கும். உடலில் உள்ள முக்கியமான உறுப்பு நுரையீரல் தான். நாம் மூக்கின் வழியே சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியாகத்தான் நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக்குழாய் மார்பு பகுதியில் இரண்டாக பிரிந்து நுரையீரலுக்கு செல்கிறது. நுரையீரல் பாதிக்கப்படும் பொது நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் கோவிட்- 19 என்னும் பெருந்தொற்று பரவிவரும் வேளையில், அது தொண்டையில் வறட்சியும் அதையடுத்து நுரையீரலில் பாதிப்பையும் உண்டாக்கி, மூச்சுத் திணறலையும் உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில் நுரையீரலை பலப்படுத்தும் பாரம்பரிய உணவுகளில் மருத்துவர்கள் அறிவுறுத்தும் உணவுகளைத் தவிர்க்காமல் எடுத்துகொள்வது நல்லது.

பால் + மிளகு + மஞ்சள்

கை வைத்தியத்தில் இருமலுக்கு கை கண்ட மருந்து இது. அந்த காலத்தில் இலேசாக இருமினாலே வீட்டில் மிளகு மஞ்சள் பால் முதல் வைத்தியமாக கிடைக்கும். சளி, அதஒ தொடர்ந்து இருமல் எல்லாமே மூச்சுகுழாய் நுரையீரல் சம்பந்தபட்ட பாதிப்பே என்பதை உணர்ந்தவர்கள் முன்னோர்கள்.

பாலை நன்றாக காய்ச்சி மிளகை நுணுக்கி அதில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து குடித்துவந்தால் நுரையீரலுக்கு வலு கிடைக்கும். மஞ்சள் ஆன் டி ஆக்ஸிடெண்ட் தன்மை நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்ககூடியவை.

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிகழ்வதால் தற்போது உங்களை காத்துகொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஒரு கப் பாலில் இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்த பால் குடித்துவருவது நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும். மசாலா பால் என்பதால் குழந்தைகளும் குடித்துவிடுவார்கள். அதிக இனிப்புக்கு கூடுதலாக நாட்டுசர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.

​பால் + பூண்டு

பாலில் பூண்டு வேகவைத்து கொடுப்பது இளந்தாய்மார்களுக்கு. காரணம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கு என்பதுதான். பூண்டு இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு பொருள். பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் நுரையீரல் புற்று நோய் வருவதை தடுக்க முடியும். பூண்டில் இருக்கும் அலிசின் என்னும் ஆன்டி பயாடிக் சத்து நுரையீரல் தொற்றை உண்டாக்கும் வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது.

பூண்டு காரத்தன்மை கொண்டிருந்தாலும் இதை பாலில் குழைத்து வேகவைத்து சாப்பிடும் போது காரம் தெரியாது. வாரம் இரண்டு நாள் 5 டம்ளர் பாலில் 10 பல் பூண்டு வீதம் உரித்து வேகவைத்து 4 டம்ளராக சுண்டும் வரை வேக வைத்து குடித்தால் நுரையீரலில் தொற்று பரவாமல் வலிமையாக வைத்திருக்கலாம். சுவாசக்குழாயில் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவதற்கு பூண்டு நன்றாகவே உதவக்கூடும்.

கஷாயம்

மாதம் ஒரு முறை கஷாயம் என்று கடைப்பிடிக்கும் பலர் இன்றும் கிராமப்புறங்களில் உண்டு. உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலையில் வைக்க அவ்வபோது அதற்கேற்ற உணவு வகைகளை எடுத்துகொள்ள வேண்டும். அந்த வகையில் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக்கி குடிக்கும் கஷாயத்தை இந்த காலத்தில் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக இந்த கஷாயம் நுரையீரல் பலவீனமாக இருந்தாலும் அதை பாதுகாக்க உதவும்.

ஒரு டம்ளர் பாலுக்கு சிறு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சோம்பு, சீரகம் சேர்த்து சிட்டிகை மிளகுப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கவும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அளவு குறைத்து கொடுக்க வேண்டும். அதிக காரம் நிறைந்த இந்த கஷாயம் நுரையீரலை சுத்தப்படுத்த உதவும். வாரம் ஒரு முறை இந்த கஷாயம் குடிப்பதை தவறாமல் கடைபிடியுங்கள்.

இஞ்சியும், சுக்கும்

சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை என்று சொல்வார்கள். சுக்கு அவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இஞ்சியை காயவைத்தால் கிடைக்கும் சுக்கு நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். சுக்கு பொடியாகவும் கிடைக்கும்.

தினமும் டீ குடிக்கும் போது இஞ்சியை தட்டி சேர்த்து இஞ்சி டீயாகவோ, அல்லது சுக்கு காபியாகவோ குடித்து வருவது மிகவும் நல்லது. இஞ்சி நுரையீரலில் இருக்கும் கழிவுகளை அகற்றும் சிறப்பு குணங்களை கொண்டிருக்கும் பொருள். நுரையீரல் பலவீனத்தையும் அதன் வீக்கத்தையும் குறைக்க வல்லது. அதனால் தான் ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி உணவில் இஞ்சியை சேர்த்துவர வேண்டும் என்று சொல்வது.

நுரையீரலையும், சுவாசப்பாதையையும் சீராக்கும் இஞ்சியை சிறிதளவேனும் உடலுக்கு எடுத்துகொள்வது நன்மை தரும். குறிப்பாக இந்த வைரஸ் தொற்று பரவும் நேரத்தில் உங்களை பாதுகாக்கும் கவசமாகவே இஞ்சியை சொல்லலாம்.

ஆடாதோடை

செடியாகவும் மரமாகவும் இருக்கும் இது மூலிகை குணங்கள் நிறைந்தது. இவை எங்கு நிறைந்திருக்கிறதோ அங்கு ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும். அதனால் தான் ஆடாதோடை ஆயுள் மூலிகை என்று அழைக்கப்படுகிறது.

உடல் சோர்வு, தசை பிடிப்பு, வலி போன்றவை நீங்க ஆடாதோடைஇலையை பறித்து கஷாயமாக்கி குடிப்பார்கள். அது மட்டுமல்லாமல் ஆடாதோடை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும். சிறு குழந்தைகளுக்கு அவ்வபோது சளி வந்தால் ஆடாதோடை இலையை உலரவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும். அரைடீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் அளவு ஆடாதோடை பொடியை குழைத்து நாக்கில் தடவ வேண்டும். இதனால் நுரையீரல் ஆரோக்கியமாக பலமாக இருக்கும்.

துளசி

துளசி எப்போதுமே சளி இருமலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள். காலையில் வெறும் வயிற்றில் துளசியை நன்றாக மென்று சாறை விழுங்கினால் அதன் சாறு இறங்க இறங்க சுவாசக்குழாயிலும் அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழும். சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள் ஒரு மண்டலத்துக்கு துளசியை மென்று சாப்பிட்டு வந்தால் சுவாசப்பிரச்சனை சீராகும்.

ஆஸ்துமா பிரச்சனையால் அவதிபடுபவர்கள் துளசியை சாப்பிட்டால் நுரையீரலை காப்பாற்றும். அதில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். நாள்பட்ட ஆஸ்துமா நோய் கூட கட்டுப்படுத்தும். துளசி சாறில் தேன் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். வறட்டு இருமல் சளி இருமல் இருப்பவர்கள் துளசியை மென்றாலே பலன் காணலாம். தற்போது கோவிட் தொற்று பிரச்சனை வராமல் இருக்கவும் நுரையீரலை பலப்படுத்தவும் இந்த உணவுகள் நிச்சயம் தேவை என்றே சொல்லவேண்டும்.

Tags: lungs corona virus